வேங்கையின் வேந்தன்-1-
கவிஞர் த.அ. சுந்தரராசன் அவர்கள் எழுதிய வேங்கையின் வேந்தன் கவி நாடகத்தை தங்களுக்கு இணையத்தில் வழங்குவதில் நான் பெருமை கொள்கிறேன் இது முழுக்க முழுக்க
சுந்தரராசன் எழுதியது தான்
அங்கம் 1
சோழமன்னன் விஜயாலயனும் அவன் அமைச்சர் கொடும்பாளூர் வேளிரும் அரசியல் நிலைப்பற்றிப் பேசுகின்றனர்.
பல்லவரைத் துணையாகக் கொண்ட பாண்டியரை எதிர்க்கும் போதெல்லாம் வென்றால் பலன் பல்லவர்க்கு; தோற்றால் இழப்பு சோழர்க்கு என்றால் அவர் துணை நம்கு எதற்கு? ' என்றான் சோழன். அதற்கு வேளிர் 'மறுமுறை பாண்டியர் படை எடுத்தால் பல்லவரை நாம் கேடயமாகப் பயன் படுத்த வேண்டும். அதனோடு நீர் வாள்மேல் கொண்டுள்ள நம்பிக்கையை உம் வழித்தோன்றல் ஆதித்தனிடம் தந்து விட்டு மூளையை நம்பும்; நமக்கு வெற்றி கிட்டும், என்றார். சரி என்ற சோழன் ஆதித்தனையும் முத்தரையனையும் ஒற்றாடப்பாண்டி நாட்டுக்குச் செல்லப் பணிக்கிறான்.
விஜயாலயன்:
கூறும், கொடும்பாளூர் வேளிரே! எம்வேலில்
கூருண்டு பாய்ச்சக் குறிதான் தெரியவில்லை...!
வேம்பெடுத்துப் பூச்சூடும் வேந்தனவன் அம்பெடுத்து
வீம்பெடுத்த சோழர் குடமூக்கில் வீசினான்முன்!
வாள் கொடுத்தோம், வாளுக்கு யாமும் எமக்காகத்
தோள்கொடுத்தார் பல்லவர்கள், தோற்றோம்;
அவர்வென்றார்
தோற்றதனால் யாமிழந்தோம் சோணாட்டின தென்பகுதி;
தோற்றதனால் யாதிழந்தார் சொல்லும் அப் பல்லவர்கள்?
மீண்டும் அரிசிலாற் றங்கரையில் வேலெடுத்த
பாண்டியர்கள் ஓர்பக்கம், பல்லவர்கள் எம்பக்கம்!
தென்பாண்டி வேந்தன்தன் சித்தத்திலும் சோழ
மண்தீண்டா வாறுநாம் வாட்டி விரட்டிவிட்டோம்.
யாம்பெற்ற தென்னஅவ் வெற்றியினால்? பல்லவர்கள்
தாம்பெற்றார் யாம்வென்ற சோழத் தரையெல்லாம்!
'வென்றால் பலன்அவர்க்கு' தேர்றறால் இழப்பெமக்கு'
என்றால் துணைஎதற்கு? சொல்லும் நீர்
வேளிர்:
இட்டஓர் நெல்
கட்டுக் கதிராகும் காவிரிபாய் சோழமன்னா!
மட்டுப் படாச்சினத்தை மாற்றித்தாம் கேட்டருள்க.
போரெடுத்துச் சோணாட்டு மண்ணின் புதுப்பகைவர்
யாரடுத்தார் என்றாலும் தாமே எழுந்திடுவார்
பல்லவர்கள் காக்கநமை...
விஜ:
பாம்பிடமிருந்து
வல்லூறு காத்த மணிப்புறாதான் நாமங்கு!
வேளிர்:
வல்லூறாய்ப் பல்லவரை எண்ணல் வலிவின்மை
கொல்லென்று கூறி எதிர்த்தல் அறிவின்மை.
புல்லுருவி போலே நாம் பல்லவஆல் பொந்தினிலே
மெல்ல வளர்ந்ததையே வீழ்த்தல் மதியடைமை!
வளரும்..2